கணத்த இதயத்துடன் படக்குழுவின் அறிவிப்பு: 'ஜனநாயகன்' ரிலீஸ் தள்ளிப்போகிறது! ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் 'தளபதி' விஜய் அவர்களின் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத சூழல்
இது குறித்து 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கணத்த இதயத்துடன் இந்த அப்டேட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ள ஒரு சூழலால் 'ஜனநாயகன்' படம் தள்ளிப்போகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்சார் போர்டில் நிலவி வரும் சில சிக்கல்கள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி முடிவடைந்தாலும், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் படக்குழுவினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்
தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே கடைசிப் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. ரசிகர்களின் இந்த உணர்ச்சிகளை தாங்கள் புரிந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், "இந்த முடிவு எங்களில் யாருக்கும் எளிதான ஒன்றல்ல. உங்கள் அசைக்க முடியாத ஆதரவே எங்கள் மிகப்பெரிய பலம்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளது.
புதிய ரிலீஸ் தேதி எப்போது?
புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொங்கல் ரேசில் இருந்து 'ஜனநாயகன்' விலகியுள்ளது விஜய் ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், தரமான படைப்பாக 'ஜனநாயகன்' வெளியாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.