சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மீதும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குறிப்பாக இரண்டு தீர்மானங்கள் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம்
தி.மு.க. கூட்டணியில் இருந்து மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொண்டு, எந்தவித நன்றி உணர்ச்சியும் இல்லாமல் முதுகில் குத்தியதாக காங்கிரஸ் கட்சிக்கு இக்கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு தி.மு.க. தான் காரணம் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கையை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரஸ் கட்சிக்குப் புதிதல்ல. பதவி ஆசையால் காங்கிரஸார் தங்களின் அரசியல் அடிப்படை நாகரிகத்தைக் கூட கைவிட்டுவிட்டனர்" என அந்தத் தீர்மானத்தில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
13 நாளில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு
மற்றொரு முக்கிய தீர்மானமாக, மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உடனடியாக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தற்போதைய அரசியல் சூழலில், தி.மு.க. இளைஞரணியின் இந்த அதிரடித் தீர்மானங்கள் கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.