வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கோல் ஆலனின் ‘மேனிபெஸ்டோ’ வெளியானது - காஷ் படேல் மட்டும் தப்பியது எப்படி?
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிகவும் உயர்மட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் நடத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றான 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க விருந்து' (WHCD) நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
தாக்குதலுக்கு முன் வந்த 'மேனிபெஸ்டோ'
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன்னதாக கோல் ஆலன் தனது குடும்பத்தினருக்கு ஒரு நீண்ட அறிக்கையை (Manifesto) மின்னஞ்சல் செய்துள்ளார்.
காஷ் படேல் மட்டும் விதிவிலக்கா?
இந்த அறிக்கையின் மிக முக்கியமான மற்றும் மர்மமான பகுதி என்னவென்றால், அதில் அவர் அமெரிக்க அரசு அதிகாரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். அதில், "அரசு அதிகாரிகள் அனைவரும் எனது இலக்குகள்; அவர்கள் பதவி படிநிலையின் அடிப்படையில் (Highest to Lowest) குறிவைக்கப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ள ஆலன், எஃப்.பி.ஐ (FBI) தலைவர் காஷ் படேலை (Kash Patel) மட்டும் தனது இலக்குப் பட்டியலில் இருந்து தவிர்த்துள்ளார்.
திரு. படேலைத் தவிர மற்ற அனைத்து அரசு அதிகாரிகளும் எனது இலக்குகள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளது தற்போது அமெரிக்க உளவுத்துறையினர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், டிரம்ப் நிர்வாகத்தில் மிக முக்கியமான அதிகாரியாகக் கருதப்படுபவர். அவரை மட்டும் ஏன் கோல் ஆலன் விட்டுவிட்டார் என்பது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு குறைபாடுகளைக் கிண்டல் செய்த ஆலன்
தனது மேனிபெஸ்டோவில், அந்த ஹோட்டலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோல் ஆலன் கடுமையாகச் சாடியுள்ளார். "ரகசிய சேவை (Secret Service) என்னதான் செய்கிறது? எந்த பாதுகாப்பும் இல்லை. என்னால் எளிதாக ஆயுதங்களுடன் உள்ளே நுழைய முடிந்தது" என்று அவர் எழுதியுள்ளார். மேலும், அவர் தனது தாக்குதலுக்கு ஒரு தனித்துவமான 'விதிமுறை'யையும் வகுத்துள்ளார். ரகசிய சேவை அதிகாரிகளை 'தேவைப்பட்டால் மட்டுமே' சுடப் போவதாகவும், பொதுமக்களைத் தங்களுக்குத் தீங்கு விளைவிக்காத வரை தாக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூடும் அடுத்தகட்ட நடவடிக்கையும்
கலிபோர்னியாவின் டோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் ஆலன், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விசாரணையில் வெளிவரும் உண்மைகள்
ஆலனின் சகோதரர் அளித்த தகவலின் பேரில், அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் சில ஆவணங்கள் சிக்கியுள்ளன. உலகை 'சரி செய்ய' தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆலன் அடிக்கடி கூறி வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காஷ் படேல் மற்றும் பிற அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், காஷ் படேலின் பெயர் மேனிபெஸ்டோவில் இடம் பெறாதது தற்செயலானதா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதி உள்ளதா என்ற கோணத்தில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திப்பிரிவு: செய்தித்தளம்.காம்